×

ஜுன் 4 வரை காவல் நீட்டிப்பு.. ஓராண்டை நெருங்கும் சிறை வாழ்க்கை.. அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி புது மனு!!

சென்னை : செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனு மீதான விசாரணை ஜுன் 4க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலும் ஜுன் 4 வரை 36வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனாலும் எங்கும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

மாறாக அவரது நீதிமன்றம் காவல் சுமார் ஓராண்டை நெருங்கி நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி மூலம் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜூன் 4-ந்தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.இதன்மூலம் 36-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வங்கி சார்பில் அசல் ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்கும் வரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.

The post ஜுன் 4 வரை காவல் நீட்டிப்பு.. ஓராண்டை நெருங்கும் சிறை வாழ்க்கை.. அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி புது மனு!! appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,CHENNAI ,Transport Corporation ,AIADMK ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...